Tamil Song Lyrics தமிழ் பாடல் வரிகள் |
அனைவருக்கு வணக்கம் இவ் இணையதளம் தமிழ் திரைப்படபாடல்களின் வரிகளின் மீது எனக்கிருக்கும் அளவில்லா பற்றுதலின் வெளிப்பாடு. இத்தளம் பாடல் வரிகளின் அவை. பாடலாசிரியர்களை முன்னிலைப்படுத்தும் ஒரு சபை. அன்று, வானில் ஒலித்ததை பள்ளி பயிற்சிப்புத்தகங்களின் கடைசி பக்கங்களில் எழுதிக்குவித்த அதே வரிகள் தான் இவை. அறையும் குறையுமாக பாடும் பக்குவம் தான் இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேடை அமைத்துக்கொடுத்த அதே வரிகள் தான் இவை. அன்று நனைத்த அடைமழை, அன்று கொஞ்சிய தென்றல் காற்று, அன்று சுட்டெரித்த உச்சி வெயில் எல்லாவையையுமே இன்றளவும் உணர வைக்கும் அதே வரிகள் தான் இவை. அன்று கடித்த மூட்டைப்பூச்சி, அன்று கிள்ளிப்பார்த்த நுளம்புக்குஞ்சு, அம்மாவின் அரவணைப்பு, அப்பாவின் ஆளுமை, அண்ணாவின் அன்பு, அக்காவின் அனுசரணை எல்லாவற்றையும் மீண்டும் அருகே கொணரும் அதே வரிகள் தான் இவை. தொலைத்துபோன அந்த வீட்டுத்திண்ணை, அந்த கிடுகுவேலி, அந்த பனைமரங்கள் தென்னைமரங்கள், அந்த இருவாலி கிணறு, அந்த பள்ளிமேசை, அந்த கிரீச்சிடும் முன் வாசல் படலை எல்லாவற்றுடனும் ஒட்டவைத்த அதே வரிகள் தான் இவை. காதலை வளர்க்க துணை நின்ற வரிகள். அதே காதல் தடம் மாறி போனபோதெல்லாம் அமைதி காக்க உடன் நின்று காவல் காத்த அதே வரிகள் தான் இவை. பாசமும் வீரமும் தோற்றுப்போய் பகை சேர்ந்த போதெல்லாம் அதை கவனம் கொண்டு கையாள கற்பித்த அதே வரிகள் தான் இவை. வலிகளை சுமக்க வழி காட்டிய அதே வரிகள் தான் இவை. சோர்வு போக்கும் சொற்களையும் சொற்றோடர்களையும் சொந்த பேச்சில் சேர்க்க சொல்லித்தந்த அதே வரிகள் தான் இவை. அதே வரிகள் தான் இவை. இருப்பினும் ஆயிரம் ஆயிரமாய் இன்றும் ஏதேதோ சொல்லி கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த வரிகள் தந்த சுகங்களை இந்த மண்ணில் எவையும் இதுவரை தந்தது இல்லை. சில மறையாதவை... சில மறவாதவை... சில மயக்கியவை... சில மந்திரித்தவை... சில மகிழ்வித்தவை... ◆◆ இவ் இணையதளத்தில் நான் பதிவேற்றிருக்கும் பாடல் வரிகள் யாவும் நானாக கணனி துணை கொண்டு எழுதியவை. அவ்வகையில் எழுதிய பாடல் வரிகளை அப்பாடல்களுடன் பலதடவைகள் கேட்டு, சொற்களை மாத்திரம் சரிபார்த்தது அல்லாமல், பாடகர்கள் பாடிய முறையையும் கவனத்தில் கொண்டு எழுதியுள்ளேன். ஆகவே தொன்னூற்று ஒன்பது விகிதமாவது சொற்கள் சரியாக இருக்கும். சேர்ந்து பாடும் வகையில் அசலான பாடலுக்கு நிகராகவும் இருக்கும். இந்த இணையதளம் எந்த அடிப்படையிலும் யாருக்கும் போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட இணையதளம் அல்ல. ஆயிரக்கணக்கில் பாடல்களை சரி பிழை பார்க்காமல் பதிவேற்றம் செய்வதில் எனக்கு அவசரமும் இல்லை அவசியமும் இல்லை. அழகழகாக எழுதப்பட்ட பாடல்களை அப்பப்போ நான் இவ் இணையதளத்தில் சேர்த்துகொள்வேன். நீங்களும் நீங்கள் விரும்பும் பாடல்களை இவ் இணையதளத்தில் சேர்த்துக்கொள்ள விரும்பின் எனக்கு தெரியப்படுத்துங்கள். முடிந்தவரை சேர்த்துக்கொள்கின்றேன். அல்லது உங்களிடம் அப்பாடலுக்கான வரிகள் கைவசம் இருப்பின் எனக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பிவையுங்கள். பாடலை சரி பிழை பார்த்து பின் சேர்த்துக்கொள்கின்றேன். அதே வேளை, ஏலவே பதிவேற்றிய பாடல் வரிகளில் தவறு காணீரெனில் தயவு கூர்ந்து தெரியப்படுத்தவும், நான் அதை திருத்திக்கொள்ள. இத்தருணம் ஈராயிரம் அளவில் பாடல்களை இங்கு விதைத்திருக்கின்றேன். மேலும் வளரும், வளம் தரும் என்றும் வாடாமல். நன்றி ஷான் உதே May 2020 |